எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

Mahendran

சனி, 29 மார்ச் 2025 (15:40 IST)
எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை என திமுக vs தவெக' போட்டி என விஜய் பேசியது குறித்து துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். 
 
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 4,034 கோடியை மத்திய அரசு தொடர்ந்து தராமல் தவிர்த்து வருவதை எதிர்த்து, வேலூர் மாவட்டத்தின் 21 இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
 
இதன் ஒரு பகுதியாக, காட்பாடி அருகிலுள்ள பிரம்மபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். இதையடுத்து, வேலூரில் 'திமுக vs தவெக' போட்டி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "எங்களுக்கு யார் யாருக்கு போட்டி என்றெல்லாம் கவலை இல்லை. எங்கள் கட்சிக்குள் நாம் உழைப்போம், வெற்றியைக் கொண்டுவருவோம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை" எனக் கூறினார்.
 
மேலும், தனது உரையில் அமைச்சர் துரைமுருகன், "இந்த ரூ. 4,034 கோடி யாருடைய சொந்தப் பணமோ இல்லை. இது மத்திய அரசின் பொறுப்பு. இந்தத் திட்டத்தின் பெயரே 'மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம்'. இதைத்தான் மோடி அரசு தாங்கிக்கொள்ள முடியவில்லை. 
 
காந்தியைச் சுட்டவர்களே இன்று அவரது பெயரால் வழங்கப்படும் நிதியை வழங்க மறுக்கிறார்கள். பணத்தைத் தடுக்கலாம், ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. பாஜக, மோடி என்று சொல்லி இனி ஓட்டுக்கேட்க முடியாது. மக்கள் துரோகம் செய்யப்பட்டுவிட்டார்கள். மோடி இல்லை, அவனது முன்னோர்கள் வந்தாலும் இந்தப் பணத்தை வாங்கித் தராமல் விடமாட்டோம்!" என்று உறுதியாகக் கூறினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்