கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

Mahendran

புதன், 2 ஜூலை 2025 (21:48 IST)
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் 7,360 கவுரவ விரிவுரையாளர்களின் குடும்பங்கள், பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. நிதித்துறை சம்பளம் வழங்க ஒப்புதல் அளித்தும், உயர் கல்வித் துறை கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்துவதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
 
தமிழக அரசு கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சிகளில் மொத்தம் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான அவர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக, கல்லூரிக் கல்வி ஆணையர், மண்டல இணை இயக்குநர்களுக்கு மே 15 அன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், மே 25-க்குள் கவுரவ விரிவுரையாளர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
அதன்படி, விரிவுரையாளர்களின் விவரங்கள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, கல்லூரி கல்வி ஆணையர் நிதித்துறைக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், முதல் சுழற்சிக்கு 5,699 பேருக்கு மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கு ₹156.72 கோடியும், இரண்டாம் சுழற்சிக்கு 1,661 பேருக்கு ₹45.67 கோடியும் தேவைப்படுவதாக கோரப்பட்டது.
 
நிதித்துறை, முதல் சுழற்சிக்கான ஒப்புதலை மே 30 அன்றும், இரண்டாம் சுழற்சிக்கான ஒப்புதலை ஜூன் 7 அன்றும் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, ஜூன் 2 அன்று முதல் சுழற்சிக்கும், ஜூன் 9 அன்று இரண்டாம் சுழற்சிக்கும் கவுரவ விரிவுரையாளர் நியமனம் தொடர்பாக அரசாணைகள் (எண்.129 மற்றும் 140) வெளியிடப்பட்டன. இந்த அரசாணைகளில், அவர்களுக்கான சம்பள ஒதுக்கீடும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நிதித்துறையின் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு ஒரு மாதமாகியும், உயர் கல்வித் துறை இதுவரை கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதன் விளைவாக, ஏப்ரல், மே, மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஊதியத்தை பெற முடியாமல் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது குடும்பங்கள் வாழ்வாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்