உலகத்திலேயே தமிழகத்தில் மட்டும்தான் உயிரிழப்பு குறைவு! – முதல்வர் பழனிசாமி!

ஞாயிறு, 7 ஜூன் 2020 (13:16 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் தமிழகத்தில் மட்டும்தான் உயிரிழப்புகள் குறைவாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களை கடந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக மொத்த தமிழகத்தில் சென்னையில் மட்டுமே 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா நிலவரம் குறித்து பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். அதுபோல கொரோனாவால் உயிரிழப்போர் சதவிகதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தமிழகத்தில்தான் குறைவு” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை தடுப்பது சாத்தியம். மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்றை தடுப்பது சாத்தியம் ஆகாது. வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்