மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல்… மணி நேரத்திற்கு கட்டணம்! – முழு விவரம்!

ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (09:56 IST)
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடந்து வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரிய திரைகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

2023ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட 10 அணிகள் இந்த போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகிறது. ஜியோ சினிமா மூலம் ஆன்லைனிலும் காணலாம்.

இளைஞர்களை கவரும் இந்த ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ஒளிபரப்ப சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, நந்தனம், வடபழனி, விம்கோ நகர், திருமங்கலம், செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் ராட்சத எல்.இ.டி திரைகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. இந்த ஐபிஎல் போட்டிகளை காண நபர் ஒருவருக்கு மணி நேரத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நண்பர்கள், கிரிக்கெட் ரசிகர்களுடன் கூட்டமாக கொண்டாடியபடி பெரிய எல்.இ.டி திரைகளில் ஐபிஎல் போட்டிகளை காண பலரும் ஆவலாக உள்ளனர். நாளை முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்