கமிஷனர் அலுவலகம் எதிரிலேயே செயின் பறிப்பு – சிசிடிவி காட்சிகள் வெளியானது !

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (07:57 IST)
சென்னை வேப்பேரியில் உள்ள் காவல் ஆணையர் அலுவலகம் எதிரிலேயே பெண் ஒருவரின் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பீதியைக் கிளப்பியுள்ளது.

சென்னை முழுவதும் ஆங்காங்கே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் செல்வ மெரின். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் பிரிவில் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக வேப்பேரியில் இருந்து எழும்பூர் செல்வதற்காக ரயில்நிலையம் நோக்கி நடந்துள்ளார்.

அவர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு எதிரில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் அவரது செயினைப் பறித்துவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வமெரின் சில மீட்டர் தூரம் அவரைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால் அவர் வேகமாக சென்றுவிட்டதால் செல்வமெரினால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக செல்வ மெரின், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் விசாரணை நடத்திய போலிஸார் இப்போது அது சம்மந்தமான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். கமிஷனர் அலுவலகம் எதிரிலேயே நடந்த சம்பவத்தால அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்