கோவை மாவட்டம் வால்பாறையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்விக் கொண்டு சென்ற நிலையில் சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் பல வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறாக பணிபுரிந்து வந்த தம்பதியர் ஒருவரின் 6 வயது குழந்தை ரோஷினி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று, தாய் கண் முன்னே ரோஷினியை கவ்விக் கொண்டு சென்றது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததுடன் அருகாமை பகுதிகளில் சிறுத்தை இருக்கிறதா என தேடி பார்த்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினரும், காவல் துறையினரும் சிறுமியின் உடலை தேடும் பணியிலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாய் கண் முன்னே குழந்தை சிறுத்தைக்கு இரையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.