காற்றின் திசை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும்; தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவித்துள்ளார். சென்னை உள்பட மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.