பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு...எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (19:51 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையில் உள்ள பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அதன் தீப்பிழம்புகள் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியதால் பட்டாசுகளில் பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டதாகவும் இந்த விபத்தில் உயிர் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்  பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்திற்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘’கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையில் உள்ள பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், மற்றும் இடிபாடுகளில் சிக்கி

மேலும் பலர் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்கள் எனத் தகவல் அறிந்து வருத்தமுற்றேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் சிகிச்சையில் இருப்போர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்றது , ஆகவே இந்த விடியா அரசு பட்டாசு தொழிற்சாலைகள், குடோன்கள் ,அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில் அந்த பட்டாசு தொழிற்சாலைகள்  பின்பற்றுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக  கண்காணித்து இனியும் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் தக்க  நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதுடன், உடல் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயரிய சிகிச்சையும் அவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்