நத்தம் விஸ்வநாதன் வீட்டில் 2வது நாளாக சோதனை

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (01:04 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 
கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமைச்சர்களில் 14 பேர் வெற்றி பெற்றனர். 5 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினார்கள். அவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தோல்வி அடைந்தார்.
 
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நத்தம் விஸ்வநாதனின் இல்லம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
இதற்கிடையேதான் கட்சி பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்படுவது குறித்தான அறிவிப்பு வெளியாகியது.
 
அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருக்கும் நத்தம் விஸ்வநாதனை, அப்பொறுப்புகளிலிருந்து இன்று விடுவிப்பதாக அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார்.
 
அதன் பின்னரே நத்தம் விஸ்வநாதன் வகித்து வந்த அதிமுகவின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பதவி அவரிடமிருந்து கடந்த ஜூன் மாதத்தில் பறிக்கப்பட்டது.
 
15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வகித்து வந்த அந்த பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு, அதிமுகவில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறைத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்