தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில், "2026 கூட்டணி ஆட்சிக்கான காலம் இல்லை," என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"திமுக கூட்டணியில் இருக்கும் நாங்கள் அதிக இடங்களைக் கேட்போம். தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதிக எதிர்பார்ப்புகள் உண்டு என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன். அதே நேரத்தில், கூட்டணி நலன் முதன்மையானது; எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் பேச்சுவார்த்தையை நடத்துவோம். கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், ஆனால் அதற்கு 2026 ஆம் ஆண்டு தேர்தல் காலம் அல்ல," என்று தெரிவித்தார்.
"திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்றும், எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்றும் அவர் கூறினார். மேலும், "ஊழல் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், ஊழலை விட மதவாதம், சாதியவாதம் தீங்கானது என்றும், அதைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும்," என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.