பில்குவாவை சேர்ந்த நிஷா, நொய்டாவை சேர்ந்த விஜேந்திராவை சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமான நிஷா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி வந்தார். இதனால், அவரது கணவர் விஜேந்திரா, ஆன்லைன் செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு குடும்பப் பொறுப்புகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார். இது அவ்வப்போது இருவருக்கும் இடையே சண்டைக்குக் காரணமாகியுள்ளது.
ஒரு கட்டத்தில், கணவரின் வற்புறுத்தலுக்கு இணங்கி நிஷா இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை குறைத்துள்ளார். ஆனால், அப்போது தனது ஃபாலோயர்கள் குறைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நிஷா, மீண்டும் கணவருடன் சண்டையிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கே மகளிர் காவல் நிலையத்தில், "என் கணவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தக் கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்" என புகார் அளித்தார். நிஷாவின் புகாரைக் கேட்டு அதிர்ந்த போலீசார், அவருக்கு அறிவுரை கூறியும், அவர் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து விவாகரத்து செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான விஜேந்திரா, தற்போது தனது வேலையை இழந்துவிட்டதாகவும், அவரது நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.