என் அண்ணன் கொலையை வைத்து பிரபலமடைகிறேனா? ராஜா ரகுவம்சி சகோதரி ஆவேசம்..!

Siva

வியாழன், 12 ஜூன் 2025 (09:36 IST)
தேனிலவில் கணவன் ராஜா ரகுவன்ஷி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான தனது அண்ணி சோனமை கடுமையாக விமர்சித்து, ராஜாவின் சகோதரி சிருஷ்டி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களைப் பதிவிட்டு வருகிறார். ஆனால், 'குடும்ப துயரத்தை பயன்படுத்தி பிரபலமடைய ஸ்ருஷ்டி முயற்சிப்பதாகப் பலரும் அவரை விமர்சித்தனர்'.
 
இதற்கு பதிலளித்த ஸ்ருஷ்டி "நான் என் அண்ணனின் மரணத்தைப் பயன்படுத்தி ஃபாலோயர்களையும், வியூஸ்களையும் அதிகரிக்கிறேன் என்று யார் சொன்னாலும், அது உண்மை இல்லை. நான் இந்த பதிவுகளைப் போடாமல், இவை வைரலாகாமல் இருந்திருந்தால், என் அண்ணனின் கொலையாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருப்பார்கள். நாங்கள் அமைதியாக இருந்திருந்தால், இந்த வழக்கு இரண்டு மூன்று நாட்களில் மூடப்பட்டிருக்கும். இதுபோல பல வழக்குகளில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாமலே போயிருக்கிறார்கள்," என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
"நான் என் அண்ணனுக்காக என்ன செய்ய முடியுமோ, அதை செய்வேன். நான் எல்லா இடங்களிலும் ட்ரோல் செய்யப்படுவதைப் பார்க்கிறேன். ஆனால் என் அண்ணனுக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒரு சகோதரி தன் அண்ணனுக்காக எப்படி குரல் கொடுக்கிறாள் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும், உதவ வேண்டும். ஆனால் நீங்கள் என்னைக் குறை சொல்கிறீர்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் அண்ணனுக்காக நான் என்ன செய்ய வேண்டுமோ, எங்கு குரல் எழுப்ப வேண்டுமோ, அதைச் செய்வேன்," என்று ஸ்ருஷ்டி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
 
4,81,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களைக் கொண்ட ஸ்ருஷ்டி, ராஜா-சோனம் திருமணப் படத்தையும், ஒரு வீடியோவையும் பின்னணியாகக் கொண்டு, "என் அண்ணன் சோனம் ரகுவன்ஷியுடன் ஏழு ஜென்மங்களுக்கும் ஒன்றாக இருப்பேன் என்று சபதம் செய்தான், ஆனால் அவளால் ஏழு நாட்கள்கூட அவனுடன் இருக்க முடியவில்லை. அவன் என்ன செய்தான் என்று அவரை கொன்றீர்கள்? ஏன் ஒருவரின் சகோதரனை, ஒருவரின் மகனைப் பறித்தீர்கள்?" என்று அழுதுகொண்டே பேசியிருந்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்