இந்தூர் தம்பதிகள் மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவு சென்ற நிலையில், கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ், தங்கள் பிள்ளைகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா என பெற்றோர்கள் சிந்திக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்சி மற்றும் சோனம் ஆகிய இருவருக்கும் கடந்த மே மாதம் திருமணமான நிலையில், திருமணத்திற்குப் பின்னர் மேகாலயா மாநிலத்திற்குத் தேனிலவு சென்றனர். அப்போது இருவரும் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அதன் பிறகு நடந்த விசாரணையில், ராஜாவை அவரது மனைவி சோனம் கூலிப்படை மூலம் கொலை செய்ததாக தெரியவந்தது.
இந்த நிலையில், இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்தை பற்றி விவாதிக்கும் போது பல விஷயங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, புதுமண தம்பதிகளை தேனிலவுக்கு ரொம்ப தூரம் அனுப்ப வேண்டுமா எனச் சிந்திக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
"இந்தச் சம்பவத்தால் நான் மிகவும் வேதனை அடைந்தேன் என்றும், இதன் மூலமாக நாம் அனைவரும் ஒரு பாடம் கற்றுக்கொண்டோம் என்றும், இனிமேல் புதுமண தம்பதிகளை அருகில் உள்ள இடத்திற்கு மட்டும் தேனிலவுக்கு அனுப்புங்கள் என்றும்," அவர் தெரிவித்துள்ளார்.