சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 25-இல் இருந்து 21-ஆக குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தெலங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மத நல்லிணக்க யாத்திரை தொடங்கிய தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் பேசிய ரேவந்த் ரெட்டி, "வாக்களிக்கும் வயதை 21-இல் இருந்து 18-ஆக ராஜீவ் காந்தி குறைத்தார். 21 வயதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக மாவட்டங்களை நிர்வகிக்கும் இளைஞர்கள் ஏன் எம்.எல்.ஏ. ஆக முடியாது?" என்று கேள்வி எழுப்பினார்.
எனவே, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆக குறைக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார். நாட்டை நிர்வகிப்பதில் இளைஞர்கள் தீவிரப் பங்கு வகிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.