மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் சுஷ்மா குப்தா என்ற பெண்ணின் பெயர் ஆறு முறை இடம்பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதைவிட ஆச்சரியம், அந்த ஆறு பதிவுகளுக்கும் வெவ்வேறு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருப்பதுதான் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் நாலாசோபாரா சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது. 'சுஷ்மா குப்தா' என்ற பெயருடன், உறவினர் பெயர் 'சஞ்சய்', வயது '39' என அனைத்து தகவல்களும் ஆறு பதிவுகளிலும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், ஒவ்வொரு வாக்காளர் எண்ணும் வெவ்வேறு வாக்குச்சாவடிகளை சுட்டிக்காட்டுகின்றன.
இது தொழில்நுட்ப கோளாறுதானா அல்லது திட்டமிட்டு நடந்த தவறா என பலரும் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர். "ஒருவரே ஒரே பக்கத்தில் ஆறு முறை ஒரே புகைப்படத்துடன் இடம்பெற்றிருப்பதை எப்படி யாரும் கவனிக்காமல் விட்டார்கள்?" என்றும், "ஒரே வாக்காளருக்கு ஆறு வெவ்வேறு வாக்குச்சாவடிகள் எப்படி ஒதுக்கப்படும்?" என்றும் கேள்விகள் எழுகின்றன.
ஒருவேளை, ஒருவர் ஒரே வாக்குச்சாவடியில் மீண்டும் மீண்டும் வாக்களிக்காமல் இருக்க, வெவ்வேறு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருக்குமோ என சிலர் யூகிக்கின்றனர். இந்த வினோதமான சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது