மலையாளத்தை போல் பெங்காலி திரைத்துறையிலும் பாலியல் தொல்லை.! பிரபல நடிகை புகார்.!!

Senthil Velan
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (17:09 IST)
பெங்காலி திரைத்துறையிலும் பாலியல் தொல்லைகள் நடப்பதாக நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளார்.
 
மலையாள திரையுலகில் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், கேரளாவைப் போல பெங்காலி திரைத்துறையிலும் பாலியல் தொல்லைகள் நடப்பதாக பெங்காலி நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹேமா குழு அறிக்கை மூலம் மலையாளத் திரைத்துறையில் நடந்த பல பாலியல் குற்றங்கள் வெளிவந்துள்ளதை போன்று வங்காளத் திரையுலகில் ஏன் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? என நான் யோசிக்கிறேன்  என்று குறிப்பிட்டுள்ளார்.  
 
அந்த அறிக்கையில் வெளியான பல குற்றச்சாட்டுகள் எனக்கும், சக நடிகைகளுக்கும் ஏற்பட்டதைப் போலவே உள்ளன என்றும் இப்படிப்பட்ட கரைபடிந்த மனம் கொண்ட நடிகர்கள்/ தயாரிப்பாளர்கள்/ இயக்குநர்கள் தங்கள் செயலுக்கான எந்த விளைவுகளையும் சந்திக்காமல் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
பெண்களை வெறும் சதைப்பிண்டங்களாக நினைக்கும் இவர்கள் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவருக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்வார்கள் என்று அவர் விமர்சித்துள்ளார். இதுபோன்ற கொடூரமானவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்றும் இவர்களுக்கு எதிராக நிற்க எனது சக நடிகைகளை அழைக்கிறேன் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
இவர்களில் பெரும்பாலானோர் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் நீங்கள் உங்கள் சினிமா வாய்ப்பை இழக்க நேரிடும் என நீங்கள் அஞ்சுவது எனக்குத் தெரியும் என்று நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார். ஆனால், எவ்வளவு நாட்கள்தான் நாம் அமைதியாக இருப்பது? கனவுகளோடு சினிமா துறைக்கு வரும் இளம் நடிகைகள் மீது நமக்கு பொறுப்பு இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


ALSO READ: மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!
 
இந்தத் துறை இனிப்பு தடவிய விபசார விடுதியென்று அவர்கள் அறிய வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்