இனி கீழ் பெர்த் கேட்டு அலையத் தேவையில்லை! - முதியவர்கள், பெண்களுக்கு ரயில்வே அசத்தல் ஏற்பாடு!

வியாழன், 30 மார்ச் 2023 (09:14 IST)
ரயில்களில் படுக்கை வசதி முன்பதிவு செய்யும்போது முதியவர், பெண்களுக்கு கீழ் பெர்த் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பல ரயில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பயணிக்க பலரும் முன்பதிவு செய்யும் நிலையில் விருப்பப்பட்ட பெர்த் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. முக்கியமாக முதியவர்கள், பெண்களுக்கு மேல் பெர்த் கிடைத்தால் அவர்கள் அதில் ஏற சிரமப்படுவதால் கீழ் பெர்த்தில் உள்ளவர்களிடம் பேசி பெர்த்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் படுக்கை வசதி பதிவு செய்தால் அவர்கள் விருப்பம் தெரிவிக்காமலே தானக கீழ் பெர்த் புக்கிங் ஆகும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் இந்த தானியங்கி முன்பதிவு 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் 4 முதல் 5 படுக்கை என்ற அளவிலும், 2 அடுக்கு ஏசி பெட்டியில் 3-4 என்ற அளவிலும் ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்