துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான தன்கர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முரண்டு பிடித்ததால், பின்னர் மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், பாராளுமன்றம் இரண்டாவது நாளாகவும் முடங்கி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே நேற்று, "ஆபரேஷன் சிந்தூர்" மற்றும் "போரை நிறுத்தியது நான் தான்" என டிரம்ப் கூறியது ஆகிய காரணங்களால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இன்று துணை குடியரசு தலைவரின் ராஜினாமா விவகாரம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.