பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய முதல் நாளே துணை குடியரசு தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

Siva

செவ்வாய், 22 ஜூலை 2025 (08:01 IST)
இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, மாநிலங்களவை சபாநாயகராகவும் உள்ள தன்கர், சபைக்கு தலைமை தாங்கினார். இந்த நிலையில், திடீரென குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தன்னுடைய உடல்நிலை காரணமாகவும், மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவதற்காகவும் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
 
ராஜினாமா கடிதத்தில், குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். "பிரதமர் மற்றும் மதிப்புக்குரிய அமைச்சரவைக்கு எனது நன்றி. பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை. என்னுடைய பதவிக்காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்," என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம், துணை குடியரசு தலைவர் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 74 வயதாகும் தன்கர், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ராஜினாமா செய்துள்ளதையடுத்து, விரைவில் புதிய துணை குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்