பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான தன்னை பேச அனுமதிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு சபை கூடியதும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "பாதுகாப்புத் துறை அமைச்சரை பேச அனுமதிக்கிறார்கள், ஆனால் என்னை பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்குப்பாராளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், "பாஜக எம்.பி.க்கள் மட்டுமே பேசுகிறார்கள். நான் எதிர்க்கட்சித் தலைவர், ஆனால் என்னையே பேச அனுமதிக்கவில்லை. எனக்கு பேச இடம் கொடுக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டை அடுத்து பிரியங்கா காந்தி கூறுகையில், "ஆளுங்கட்சியினர் விவாதத்திற்கு தயாராக இருந்தால், எதிர்க்கட்சி தலைவரைப் பேச அனுமதிக்க வேண்டும். ராகுல் காந்தி பேச எழுந்து நின்றபோது அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது" என்று கண்டனம் தெரிவித்தார்.