மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்ட கல்வி அலுவலகத்தில், சினிமா பாணியில் ஒரு பெரும் மோசடி அம்பலமாகியுள்ளது. கல்வி துறையில் பணிபுரியாத ஒரு பெண் இறந்ததாக போலியான ஆவணங்களை தயாரித்து, அந்த பெண்ணின் மகன் என்று பொய்யாக கூறி, ஒருவர் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற்றுள்ளார்.
தியோன்தார் தாலுகாவை சேர்ந்த பிரிஜேஷ் கோல் என்பவர், தனது 'தாய்' ஆன பேலா காளி கோல் என்ற உதவி ஆசிரியர் இறந்ததாக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, ஜவுடோரி அரசு மேல்நிலை பள்ளியில் பியூன் வேலையை பெற்றுள்ளார். அதிர்ச்சியளிக்கும் வகையில், பேலா காளி கோல் என்பவர் கல்வி துறையில் வேலை செய்யாதவர்; பிரிஜேஷ் இவருக்கு சம்பந்தப்பட்டவரும் இல்லை.
சம்பளம் வழங்கும்போது பள்ளி முதல்வர் ஆவணங்களில் முரண்பாடுகளை கண்டறிந்ததால், மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில் பிரிஜேஷின் நியமனம் ரத்து செய்யப்பட்டதுடன், மேலும் ஐந்து போலி நியமனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் போலியான ஆவணங்களை அடிப்படையாக கொண்டவை.
மாவட்ட ஆட்சியர் பிரதீபா பால் கூற்றுப்படி, போலியான இறப்பு சான்றிதழ்கள், காவல் துறை சரிபார்ப்புகள், உறுதிமொழிகள் ஆகியவை உண்மையானவை போலவே தோன்றி உள்ளன. ஆனால், உன்னிப்பான ஆய்வில் அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.
கடந்த ஆண்டில் செய்யப்பட்ட 36 கருணை நியமனங்களில், 10 பேர் தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் போலியான ஆவணங்களை பயன்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.