மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயில்வே பாலம் ஒன்று 90 டிகிரி வளைவில் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ள நிலையில், "இந்த பாலத்தை எவன் கட்டியது?" என்று இது குறித்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ரயில்வே பாலம் ஒன்று ₹18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 648 மீட்டர் நீளமும், 8.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலம், வாகனங்கள் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல், 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த புகைப்படத்தை இணையத்தில் அனைவரும் பகிர்ந்து வரும் நிலையில், "இப்படி ஒரு பாலத்தில் வாகனங்கள் சென்றால் விபத்துக்கள் ஏற்படாதா? இந்த பாலத்தை யார் கட்டியது?" என கடுமையான விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜேஷ் ஷர்மா இது குறித்து ஆய்வு செய்வதாக உறுதி அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.