மகாராஷ்டிர மாநிலத்தில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூர், கல்யான் மற்றும் மாலேகான் போன்ற நகரங்களின் உள்ளாட்சி நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள சில உள்ளாட்சி அமைப்புகள், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. இந்த உத்தரவு, சுதந்திர தினத்தை ஒரு 'புனிதமான' தினமாக கொண்டாடும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "சுதந்திர தினத்தன்று இறைச்சி சாப்பிடுவது தவறில்லை. இது அவரவர் தனிப்பட்ட விருப்பம்" என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித்பவார் தலையிட்டு, உள்ளாட்சி நிர்வாகங்களின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். "யார் எதைச் சாப்பிடுவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதில் உள்ளாட்சி அமைப்புகள் தலையிடக்கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.