ஈரான் - இஸ்ரேல் இடையேயான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அமெரிக்காவையும் தீவிர கவலையில் ஆழ்த்தியுள்ளது
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரின்போது ஹமாஸ்க்கு ஆதரவாக நின்ற ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியிருந்தது. அப்போது முதலே ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழத் தொடங்கிவிட்டன. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், அணு ஆயுத தயாரிப்பை கைவிடுமாறு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா காய்களை நகர்த்தி வந்தது.
ஆனால் அமெரிக்காவின் நண்பனான இஸ்ரேலோ, இது வேலைக்கு ஆகாது, ஈரானின் அணு ஆயுத உற்பத்தி தளங்களை தாக்க வேண்டும் என விடாபிடியாக இருந்து வந்தது. இந்நிலையில்தான் நேற்று முன் தினம் விமானங்களையும், ட்ரோன்களையும் ஈரானுக்குள் அனுப்பிய இஸ்ரேல் அங்கு பல அணு ஆயுத உற்பத்தி ஆய்வு தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் கோபமடைந்த ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இஸ்ரேலின் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களின் மீது வீசித் தாக்கியது. இதில் பல ஏவுகணைகளை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறிவந்தாலும், டெல் அவிவ் நகரத்தில் ஈரானின் ஏவுகணைகள் விழுத்து தாக்கிய வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதனால் இரு நாடுகளிடையேயான போர் உச்சமடைந்து வருவதாக உலக நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன, அணு ஆயுத உற்பத்தி குறித்து இன்றுதான் அமெரிக்கா ஈரானுடன் பேசுவதற்காக ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அமெரிக்காவின் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை என ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. ஈரானிடம் அணு ஆயுத பேச்சுவார்த்தை என்ற வெண்ணெய் திரண்டு வந்த நேரத்தில் இஸ்ரேல் பானையை உடைப்பது போல தாக்குதலை நடத்தி பிரச்சினை ஏற்படுத்தி விட்டதில் அப்செட்டில் இருக்கிறதாம் அமெரிக்கா.
Edit by Prasanth.K