இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் கடுமையான போர், இரு நாடுகளுக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் மத்திய கிழக்கு முழுவதையும் பாதிக்கும் என பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். போர் நீடித்தால், இந்தியாவுக்கும் பொருளாதார ரீதியாக சில பாதிப்புகள் ஏற்படலாம். ஏனெனில், இந்தியா இரு நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை கொண்டுள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதி செய்கிறது. ஈரானின் பெரிய பங்கு காரணமாக, போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை 11%க்கும் மேல் உயர்ந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $75.32 ஆகவும், WTI $73.42 ஆகவும் அதிகரித்துள்ளது. போர் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரலாம். இது இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருட்களின் விலையை அதிகரிக்கும்.
அதேபோல் ஆசியாவில் இஸ்ரேலின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளி இந்தியா தான். மின்னணு இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள், ஆயுதங்கள், உரங்கள், விலைமதிப்பற்ற கற்கள் போன்றவற்றை இஸ்ரேலில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த போர் நீடித்தால் மேற்கண்ட பொருட்களின் விலை உயரும்.
எனவே இந்த போர் நீடித்தால், இந்தியாவின் இறக்குமதி செலவுகள் அதிகரித்து, பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.