டெல்லியில் உள்ள இந்திய கடற்படை தலைமையகத்தில் இருந்து ஒருவர்பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI-க்காக பல ஆண்டுகளாக, ஏன் 'ஆபரேஷன் சிந்தூர்' நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்கூட உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரது கைது பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர் ஹரியானாவை சேர்ந்த விஷால் யாதவ். இவர் கடற்படை தலைமையகத்தில் ஒரு சாதாரண எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது செல்போனை ஆய்வு செய்ததில், கடற்படை மற்றும் பிற பாதுகாப்புப் பிரிவுகள் தொடர்பான பல ரகசிய தகவல்களைப் பாகிஸ்தானியப் பெண் ஒருவருக்கு பணத்திற்காக வழங்கியது அம்பலமாகியுள்ளது. இந்தப் பெண் ISI-ன் உளவு முகவராக செயல்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், விஷால் யாதவ்வுக்கு ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட பெரிய இழப்புகளை சமாளிக்கவே அவருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி வர்த்தக கணக்குகள் வழியாகவும், தனது வங்கி கணக்குகள் வழியாகவும் அவர் பணத்தை பெற்றதாக போலீஸார் கூறுகின்றனர்.
தற்போது, விஷால் யாதவ் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய விசாரணை மையத்தில் பல்வேறு உளவு அமைப்புகளால் கூட்டாக விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த மிகப் பெரிய உளவுக் கும்பலில் வேறு யார் யார் ஈடுபட்டுள்ளனர், எவ்வளவு முக்கியமான ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன என்பதைக் கண்டறிய பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக முயன்று வருகின்றன.