கள்ளக்காதலியை வர வைக்க கடத்தல் கடிதம்; அதுவும் விமான கடத்தல்...

வெள்ளி, 14 ஜூன் 2019 (16:56 IST)
ஜெட் விமானத்தின் கழிவறையில் போலியான கடத்தல் கடிதம் எழுதி வைத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
2017 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜூ சல்லா, மும்பையிலிருந்து டெல்லிக்கு செல்லும் ஜெட் விமானத்தில் பயணித்தார். அப்போது, அந்த விமானத்தை கடத்த உள்ளதாக கழிவறையில் அவர் ஒரு கடித்தை எழுதி வைத்தார்.
 
அக்கடிதத்தில், விமானத்தில் 12 கடத்தல்காரர்கள் இருப்பதாகவும், பல்வேறு வெடிபொருட்கள் இருப்பதாகவும் எழுதியிருந்தது. அதனால், விமானத்தை உடனடியாக பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீருக்கு திருப்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அக்கடிதத்தை எழுதியதை அவர் பின்பு ஒப்புக்கொண்ட சூழலில், அவசர நிலையில் அகமதாபாத் நகரில் விமானம் தரையிரக்கப்பட்ட பிறகு, அதிலிருந்த சல்லா கைது செய்யப்பட்டார்.
 
சம்பவம் நடந்த நேரத்தில், ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த சல்லாவிற்கு, ஜெட் விமான பணிப்பெண் ஒருவருடன் காதல் இருந்தது தெரிய வந்தது. மும்பையில் வாழ்ந்து வந்த அப்பெண்ணை தன்னோடு இணைந்து வாழ அவர் டெல்லிக்கு அழைத்ததாகவும், அதை அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதனால், விமான நிறுவனத்துக்கு அவப்பெயர் வரும் வகையில் இதைச்செய்தால், அவரின் வேலை பறிபோவதுடன், தன்னோடு டெல்லியில் இணைந்து வாழ்வார் என்று சல்லா எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டது. விமான நிறுவனத்துக்கு அவப்பெயர் கொண்டுவரவே இவ்வாறு செய்ததாக அவர் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்