மேகாலயாவிற்கு தேனிலவு சென்ற தம்பதிக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கும், சோனம் என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில், தேனிலவை கொண்டாட மேகாலயாவில் உள்ள சுற்றுலா தளமான சோரா எனப்படும் சிரபுஞ்சிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள சுற்றுலா வீடு ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் மே 24ம் தேதி நோங்கிரியாட் செல்வதற்காக சுற்றுலா வீட்டை காலி செய்துவிட்டு புறப்பட்டுள்ளனர்.
அதற்கு பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்களது செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இதுத்தொடர்பாக அவர்களது வீட்டார் போலீஸில் புகார் அளித்த நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது மேகாலயாவில் அவர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் அருகே பெண் ஒருவரின் வெள்ளை சட்டை, உடைந்த செல்போன் கவர், சில மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து மேகாலயா போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுத்தொடர்பாக அப்பகுதி சுற்றுலா பயணிகள், வாடகை கார் ஓட்டுனர்கள், சுற்றுலா ஏஜெண்ட் என பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K