15 வயது சிறுமியிடம் 50 லட்ச ரூபாய் மோசடி.. மார்பிங் செய்து மிரட்டிய நண்பனின் சகோதரர்..

Mahendran

புதன், 5 மார்ச் 2025 (17:00 IST)
ஹரியானா மாநிலத்தில் பதினைந்து வயது சிறுமியிடம், அவருடன் படிக்கும் மாணவரின் சகோதரர் மிரட்டி 50 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, தன்னுடைய பாட்டியின் வங்கிக் கணக்கு பாஸ்வேர்ட் தன்னிடம் இருப்பதாகவும், அவ்வப்போது பணம் எடுத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இதை, அவருடன் படிக்கும் மாணவர், தனது சகோதரரிடம் தற்செயலாக பகிர்ந்துள்ளார். அதனை கேள்விப்பட்ட அந்த சகோதரர், திட்டமிட்டு அந்த சிறுமியிடம் இருந்து பணம் பறிக்க முடிவு செய்தார்.
 
இதனை அடுத்து, சிறுமியின் சமூக வலைதளக் கணக்கை கண்டுபிடித்து, அவருடன் நட்பாக பழகி, புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியுள்ளார். முதலில் ஆயிரம், இரண்டாயிரம் என மிரட்டிய அவர், ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கேட்க தொடங்கினார். மிரட்டல் காரணமாக பாட்டியின் கணக்கிலிருந்து நெட் பேங்கிங் மூலம் சிறுமி பணத்தை அனுப்பியுள்ளார்.
 
இதை, அந்த சிறுமியின் ஆசிரியர் தற்செயலாக கண்டுபிடித்த நிலையில், உடனடியாக குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில், சிறுமியிடம் இருந்து பணம் பறித்த நவீன் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 36 லட்சம் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்