மருமகளிடம் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

புதன், 11 ஜூன் 2025 (12:23 IST)
நகை, பணம், பைக், கார் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்பது வழக்கமான ஒன்று. ஆனால், மருமகளின் சிறுநீரகத்தை மாமியார் ஒருவர் வரதட்சணையாக கேட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ள வழக்கில், தன்னுடைய மாமியார் தன்னிடம் வரதட்சணையாக சிறுநீரகத்தைக் கேட்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
கடந்த 2021 ஆம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்ததாகவும், திருமணம் நடந்த நாள் முதல் மாமியார் தன்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 இந்த நிலையில், தனது கணவரின் சிறுநீரகக் கோளாறு பற்றி சமீபத்தில் தனக்கு தெரிய வந்ததாகவும், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய சிறுநீரகத்தை தனது மாமியார் கேட்டு மிரட்டி வருவதாகவும், இதற்காக தான் தாக்கப்பட்டதாகவும், சிறுநீரகத்தைத் தர முடியாது என்று சொன்னதால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தியதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டார். இதனை அடுத்து, வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் கணவர், மாமியார் உள்பட நான்கு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்