ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகள் போன்றவை வாக்காளரின் இந்திய குடியுரிமைக்கு நம்பகமான ஆவணங்கள் அல்ல என்றும், தேர்தலில் வாக்களிக்க பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகளை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், இதற்குப்பதிலளித்த தேர்தல் ஆணையம், "ஏராளமான ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகள் போலியானவைகளாக இருப்பதால், அவற்றை இந்திய குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்று கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளது. மேலும், "வாக்காளர் பட்டியல் மாற்றப்பட இருக்கிறது, குடியுரிமையை சரிபார்க்க பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழ் தேவை" என்றும் கூறியுள்ளது.
இந்தியக் குடிமக்கள் மட்டுமே வாக்காளராக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ கடமை" என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, பரிசுத்தமான தேர்தல் நடைபெறுவதற்காகத்தான் இந்த சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், இவற்றை சட்ட மீறல் என்று கூற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி முடிவு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதுடன், பல கோடி வாக்காளர்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.