அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், திருமணம் ஆகும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் தொடங்குவதோடு, இலவச பட்டுச்சேலையும் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த திட்டமும் இல்லை என குற்றம்சாட்டினார். மேலும், "மக்கள் சேவையில் முதன்மையான கட்சி என்றால் அது அதிமுகதான்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் என்றும், நெசவாளர்களை வாழ வைக்கும் வகையில் அதிமுக ஆட்சி அமையும் என்றும் அவர் உறுதி அளித்தார். உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு அன்றைய தினமே பணம் கொடுக்கும் நிலை உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இவற்றுடன், திருமணம் செய்யும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும், அதுமட்டுமின்றி மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலையும் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்தார்.