என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

Mahendran

செவ்வாய், 22 ஜூலை 2025 (17:16 IST)
காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை அவரது சொந்த கட்சிக்காரர்களே கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என செய்தியாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கம் அளிக்க சசி தரூர் தலைமையில் தான் வெளிநாட்டுக்கு ஒரு குழு சென்றது. அங்கு மோடியின் அரசையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் சசி தரூர் பாராட்டி பேசியது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, "மோடியின் ஆற்றல் உலக அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய சொத்தாக இருக்கிறது" என்று மோடியை பாராட்டி சசி தரூர் கட்டுரை எழுதியதை காங்கிரஸ் கட்சியினர் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
 
இந்த நிலையில், கேரள காங்கிரஸ் நடத்தும் எந்த நிகழ்ச்சிக்கும் சசி தரூர் அழைக்கப்பட மாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளிதரன் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இது சசி தரூருக்கு எதிரான காங்கிரஸின் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
 
இது குறித்து இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மற்றவர்களின் நடத்தை குறித்து தயவு செய்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். என்னுடைய நடத்தை பற்றி மட்டுமே நான் பேச முடியும்" என்று தெரிவித்தார். மேலும், "என்னைப் பற்றி இவ்வாறு கூறுபவர்கள் முதலில் அப்படி சொல்வதற்கு ஏதேனும் அடிப்படை காரணத்தை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் யார் என்று எனக்குத் தெரிய வேண்டும்" என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சசி தரூரின் இந்த நேரடி பதிலடி, காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் மோதலை மேலும் வெளிப்படுத்தியுள்ளதுடன், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக என்ன திசையை நோக்கி செல்லும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்