டெல்லியில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்து பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரும், "டெல்லியில் மழை பெய்தால் மக்கள் படகில் செல்ல வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது, ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை" என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.
கிழக்கு டெல்லியின் ஒரு பகுதியில் ஒரு பெண் படகு ஓட்டி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோவை பகிர்ந்த ஒரு பாஜக பிரமுகர், "டெல்லியில் இலவச நீர்வழிப் போக்குவரத்து" என கிண்டல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே இடத்தில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் படகுகளில் பயணித்தபோது, அது ஆம் ஆத்மி அரசின் பொறுப்பின்மை என பாஜகவினர் விமர்சித்த நிலையில், தற்போது பாஜக ஆட்சியிலும் அதே நிலை தொடர்வதால் ஆம் ஆத்மி கட்சியினர் பாஜகவை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, "பிப்ரவரியில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. எனவே, விரைவில் டெல்லியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு முடிவு காணப்படும்" என்று உறுதி அளித்துள்ளார்.
டெல்லியின் இந்த பருவமழை கால வெள்ளப் பிரச்சனை, இரு கட்சிகளுக்கும் இடையே தொடர் அரசியல் மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு யார் தீர்வு காண்பார்கள் என்பதே பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் எழும் முக்கிய கேள்வியாக உள்ளது.