மீண்டும் சொதப்பிய கூகுள் மேப்.. தவறான வழிகாட்டியால் ஓடைக்குள் விழுந்த கார்..!

Mahendran

வெள்ளி, 25 ஜூலை 2025 (10:22 IST)
கூகுள் மேப் வழிகாட்டியை நம்பி ஏற்கனவே பல விபத்துக்கள் நடந்துள்ள நிலையில், தற்போது கூகுள் மேப் மீண்டும் தவறான வழியை காட்டியதால் கார் ஓடைக்குள்  கவிழ்ந்த சம்பவம் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கோட்டயத்தை சேர்ந்த 62 வயது ஜோசப் மற்றும் அவரது மனைவி ஷீபா ஆகியோர் தங்கள் நண்பரின் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். ஜிபிஎஸ் வழிகாட்டுதலை பின்பற்றி கூகுள் மேப் மூலம் அவர்கள் கார் ஓட்டிக்கொண்டிருந்த நிலையில், திடீரென கார் சாலையிலிருந்து விலகி, ஒரு நீர் நிறைந்த ஓடைக்குள் கவிழ்ந்தது. "சாலை முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்ததால், சாலையை தெளிவாக பார்க்க முடியவில்லை" என்று காரை ஓட்டி சென்ற ஜோசப் கூறினார்.
 
காரில் இருந்த தம்பதியை, விபத்து நடந்த அந்த பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக காப்பாற்றினர். "இன்னும் ஒரு அரை அடி தூரம் கார் சென்று இருந்தால், பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுக்குள் கார் முழுவதுமாக சென்று பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்" என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். 
 
ஜிபிஎஸ் வழிகாட்டுதலை மட்டுமே நம்பி செல்லும் பல ஓட்டுநர்கள், புதிதாக வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகைகளை கவனிக்காமல் கார் ஓட்டுவதாலேயே இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. தொழில்நுட்பத்தை மட்டும் முழுமையாக நம்பாமல், சூழலை உணர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்