தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, சி.பி. ராதாகிருஷ்ணன், தனது மகாராஷ்டிரா ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதன் காரணமாக, குஜராத் மாநில ஆளுநரான ஆச்சார்ய தேவவிரத்துக்கு, மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற துணை குடியரசு தலைவர் தேர்தலில், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். புதிதாகத் துணை குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன் விளைவாக, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று குடியரசு தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு அவர் இமாசலப் பிரதேச ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.