ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பொதுத்துறை வங்கி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில், காவலாளியாக ரியாஸ் அகமது ஷா (20) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர், நேற்றிரவு மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பரிசோதனையில், ரியாஸ் உடலில் 300 தோட்டாக்கள் பாய்ந்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவல், ரியாஸின் குடும்பத்தினர் உள்பட பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் யாரேனும் அவரை கொன்றிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் தரப்பில் கூறப்படுகிறது. அதேசமயம், பாதுகாப்புப் படையினரே ரியாஸை கொடூரமாக சுட்டுக் கொன்றுவிட்டு, நாடகம் ஆடுகின்றனர் என்று, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.