தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், சிறப்பு புலனாய்வுப் பிரிவு ரூ. 11 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படு ஆந்திரப் பிரதேச மதுபான ஊழல் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக எஸ்ஐடி தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது என்றும், மூத்த ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களின் பங்கு குறித்த முக்கியமான ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விசாரணையில், விரைவில் மேலும் பல முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக, மதுபான வழக்கு தொடர்பாக எம்.பி. பி.வி. மிதுன் ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. தனஞ்சய ரெட்டி, சிறப்புப் பணி அதிகாரி கிருஷ்ண மோகன் ரெட்டி மற்றும் பிறரின் கைதுகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ரூ.11 கோடி பறிமுதல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"எஸ்ஐடி ஒரு அரசியல் ஆயுதமாகிவிட்டது. இது நீதி அல்ல, இது துன்புறுத்தல்," என்றும், இந்த அத்துமீறலை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.