ஊழல் குறித்து புகாரளிக்க பர்சனல் வாட்ஸ் அப் எண் அளிக்கும் புது முதல்வர்!

வியாழன், 17 மார்ச் 2022 (17:32 IST)
ஊழல் குறித்த புகார்களை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 
 
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 59 தொகுதிகளில் வென்றால் பெரும்பான்மை என்ற நிலையில் 92 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான் நேற்று பதவியேற்றுக்கொண்டார். 
 
இந்நிலையில் இன்று செய்தியாலர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பகவந்த் மான், ஊழல் குறித்த புகார்களை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஊழலை ஒழிப்பதற்கு பஞ்சாப் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
 
மேலும்,  லஞ்சம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் வாட்ஸ் அப் செயலி மூலமாகவே அளிக்கும் வகையில் உதவி எண் அறிவிக்கப்படும். இந்த உதவி எண், விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான மார்ச் 23 அன்று அறிவிக்கப்படும். அந்த உதவி எண் என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ் அப் எண்ணாக இருக்கும். 
 
பஞ்சாபில் உங்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் மறுக்காதீர்கள், அதற்கு பதிலாக அதனை வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து அந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள். என்னுடைய அலுவலகம் அதுகுறித்து விசாரணை நடத்தும். எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்