மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு டீக்கடையில், கடந்த 100 ஆண்டுகளாக எந்த ஊழியரும் இல்லாமல் வாடிக்கையாளர்களே டீயை போட்டு குடித்து, அதற்குரிய பணத்தை கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டு செல்லும் நடைமுறை தொடருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சம்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த டீக்கடையில் ஓனர் இருப்பதில்லை; ஊழியர்களும் இருப்பதில்லை. காலை நேரத்தில், கடை ஓனர் வந்து கடையை திறந்து விட்டு, அதற்கு தேவையான பொருட்களை மட்டும் ஏற்பாடு செய்து விட்டு சென்று விடுவார்.
அதன்பின், டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்கள் மாறி மாறி டீயை போட்டு தங்களுக்கும், தங்கள் அருகிலுள்ளவர்களுக்கும் வழங்கி, பிறகு கிளம்பி விடுவார்கள். மேலும், தாங்கள் குடித்த டீக்கு உரிய பணத்தை, சரியாக கணக்கிட்டு, கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் போட்டு விட்டு செல்கின்றனர்.
கடை ஓனர் மற்றும் ஊழியர்கள் இல்லாமலே, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக இந்த டீக்கடை இயங்கி வருகிறது. இது முழுமையாக நம்பிக்கையின் அடிப்படையிலும், மனித அன்பின் அடிப்படையிலும் தான் நடந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.