சாலையில் சென்ற சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

வியாழன், 23 நவம்பர் 2023 (10:18 IST)
மத்திய பிரதேசத்தில் சாலையில் சென்ற சிறுமியை சிலர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய பிரதேசம் மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த நான்கு பேர் சிறுமியை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் விடுவதாக கூறி காரில் ஏற்றி சென்றுள்ளனர்.

அவர்களின் தீய எண்ணம் தெரியாமல் சிறுமியும் காரில் ஏறிவிட, வேகமாக காரை ஆள்நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்குள் ஓட்டி சென்றுள்ளனர். இதனால் சிறுமி பயத்தில் அலற தொடங்கியுள்ளார். காட்டுக்குள் சென்ற அவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியின் சத்தம் கேட்க கூடாது என்பதற்காக காரில் பாடலையும் சத்தமாக ஒலிக்கவிட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை அந்த இடத்தில் அப்படியே விட்டுவிட்டு காரில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது வீட்டிற்கு சென்று அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுத்த நிலையில் மாவட்ட தலைமை  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் ஒருவர் பிடிபட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்