2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2016 (12:39 IST)
2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.
 

 
புதுடெல்லியைச் சேர்ந்த காளிசரண் என்ற முதியவர், கடந்த 2013ஆம் ஆண்டு 2 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.
 
இது குறித்து காவல் துறையினரிட புகார் அளிக்கப்பட்டதன் பேரில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் காளிசரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில், நீதிபதி சஞ்சய் சர்மா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
 
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் காளிசரணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு கிடைக்க தில்லி சட்ட ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.
 
முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டுக்களை காளிசரண் மறுத்திருந்தார். அந்த குழந்தையின் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டின் உரிமையாளருக்கு தான் நெருங்கிய உறவினர் என்றும், வாடகையை உயர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தன் மீது பொய் வழக்கு தொடரப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால், அவரது தரப்பு வாதங்களை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
அடுத்த கட்டுரையில்