புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயில் விராலிமலை முருகன் கோவில் ஆகும். இங்கு முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார். மலை உச்சியில், 207 படிகளுடன் கோயில் அமைந்துள்ளது.
'விராலிமலைக்கு வா' என்று முருகன் அசரீரியாக அழைக்க, அங்கு வந்த அருணகிரிநாதருக்கு வேடன் உருவில் வந்து முருகனே வழி காட்டினார். இங்கு வழிபட்ட அருணகிரிநாதர் அஷ்டமா சித்தி பெற்று, முருகனைப் பற்றித் திருப்புகழில் 18 முறை பாடியுள்ளார்.
இக்கோவிலின் தனிச்சிறப்பு, முருகனுக்குப் சுருட்டு படைக்கும் வழக்கமே. ஒரு முறை, குளிரில் நடுங்கிய பக்தர் கருப்பமுத்துவுக்கு, முருகனே சுருட்டு கொடுத்தார். ஆற்றில் இறங்கும்போது அவர் மறைந்ததை கண்டு கோவிலுக்கு சென்றபோது, முருகன் முன்பாக சுருட்டு இருப்பதை கண்டார். அன்று முதல் இந்த நைவேத்தியம் உருவானது.