சமீபகாலமாக இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை இழந்து வருகிறது. கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இழந்தது. இதற்குக் கோலி போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் சர்வதேசப் போட்டிகள் இல்லாத போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதையேற்று அனைத்து வீரர்களும் ரஞ்சி போட்டியில் விளையாடினர். ஆனால் யாருமே பெரிதாக ரன்சேர்க்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி கூட 6 ரன்களில் ஸ்டம்ப்புகள் பறக்க விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில் கோலியின் விக்கெட்டை எடுத்த சங்வான் தெரிவித்துள்ள கருத்துதான் இப்போது கோலி ரசிகர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. அதில் “டெல்லி அணிக்கெதிரான போட்டியில் நான் விளையாடுவதற்கு முன்னர் என்னிடம் பலரும் ஆஃப் ஸைடுக்கு வெளியே ஐந்தாவது ஸ்டம்ப் அல்லது ஆறாவது ஸ்டம்ப்பில் வீசினால் கோலியை எளிதாக அவுட் ஆக்கிவிடலாம் என்றார்கள். ஆனால் நான் ஒருவரின் பலவீனத்தைப் பயன்படுத்தி விக்கெட் எடுப்பதை விட என் சொந்த முயற்சியில் விக்கெட் எடுக்கவேண்டுமென்று முயற்சி செய்து விக்கெட்டை எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.