விளாதிமிர் புதின் நீண்டகாலம் பெரிய விலை தரவேண்டியிருக்கும்: எச்சரித்த பைடன்

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (10:09 IST)
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றார்.


இதற்காக புதின் "நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்" என்றும் கூறினார் பைடன்.

'ஸ்டேட் ஆஃப் யூனியன்' (அமெரிக்க ஒன்றியத்தின் நிலை) உரையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடங்கிய பைடன் இந்த எச்சரிக்கையை விடுத்தார். சர்வாதிகாரிகள் தங்கள் ஆக்கிரமிப்புக்கு உரிய விலையை தராவிட்டால், அவர்கள் மேலும் குழப்பத்தை விளைவிப்பார்கள் என்று கூறிய பைடன், முன்கூட்டியே திட்டமிட்ட, தூண்டுதல் ஏதுமில்லாத போரை தொடங்கியபோது "சுதந்திரத்தை நேசிக்கும் நாடுகள்" அமெரிக்காவுடன் நிற்பதாக கூறினார் பைடன்.

"புதின் தவறாக கணக்குப் போட்டுவிட்டார். நாங்கள் தயாராகவே இருந்தோம்," என்றும் தெரிவித்தார் பைடன்.

பெரும் முதலாளிகளாலும், வன்முறை நிறைந்த இந்த ஆட்சியில் இருந்து பல்லாயிரம் கோடியைத் திருடிக் கொண்ட ஊழல் அதிகாரிகளாலும் ரஷ்ய ஆட்சி தாங்கிப் பிடிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார் பைடன். தங்கள் ஐரோப்பியக் கூட்டாளிகளுடன் இணைந்து ரஷ்ய சொகுசுக் கப்பல்கள், ஜெட் விமானங்கள், சொகுசு சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாகவும் கூறினார் பைடன்.

"தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்," என்று அவர் கூறினார். எந்தெந்த ரஷ்யப் பெருமுதலாளிகள் மீது தடைவிதிக்கப்பட்டது என்ற பட்டியலை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்