இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், "தேவைப்பட்டால் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாடு வரம்புக்கு மீறி அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டுவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். "அந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டால், ஈரான் மீது மீண்டும் கண்டிப்பாக தாக்குதல் நடத்தப்படும். மற்றொரு தாக்குதலுக்கு உத்தரவிட நான் சற்றும் தயங்க மாட்டேன்," என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், தனது பேச்சில் ஈரான் தலைவர் கமெனியை அவர் கடுமையாக விமர்சித்ததும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், "இஸ்ரேல் அழிந்துவிடும் என்பதால் அமெரிக்கா தலையிட்டது" என்றும் ஈரான் மதகுரு காமேனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்கள் மாறி மாறி கடுமையாகப் பேசி வருவது, மீண்டும் ஒரு பெரும் போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பதற்றமாக இருக்கும் மத்திய கிழக்கு சூழலை இது மேலும் சிக்கலாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.