கொல்கத்தாவின் காஸ்பா பகுதியில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில், முதலாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், 55 வயது பாதுகாப்பு காவலாளி இன்று கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இந்த சம்பவத்தில் 3 பேர் கைதான நிலையில் தற்போது நான்காவதாக ஒருவர் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தின்படி, ஜூன் 15 அன்று இரவு 7:30 மணியளவில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் பிரிவு கூட்டம் முடிந்த பிறகு, முன்னாள் மாணவர், வழக்கறிஞர் மனோஜித் மிஸ்ரா , சைஃப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகிய 2 சட்டக்கல்லூரி மாணவர்கள் என 3 பேரும் தன்னைச் சூழ்ந்துகொண்டு, காவலாளியை மிரட்டி வெளியேற்றிவிட்டு, அறையை பூட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
"நான் எதிர்த்துப் போராடினேன், அழுதேன், கெஞ்சினேன். ஹாக்கி ஸ்டிக்கால் தாக்கப்பட்டு, குடும்பத்தினரையும் காதலனையும் கொன்றுவிடுவதாக மிரட்டப்பட்டேன்," என்று மாணவி தனது புகாரில் கூறியுள்ளார்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக துன்புறுத்திய பின்னர், அதிகாரிகளிடம் சொல்ல கூடாது என்று மிரட்டி அவரை விடுவித்துள்ளனர். "நான் ஒரு சட்ட மாணவி. இப்போது நானே பாதிக்கப்பட்டவள். எனக்கு விரைவில் நீதி வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.