மதுசூதனனுக்கு எமனாகும் கொடுங்கையூர் குப்பை மேடு - திமுக திட்டம் பலிக்குமா?

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (13:21 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை மின் கம்பம் சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்த திமுக சில அதிரடி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


 

 
ஆர்.கே.நகர் தொகுதியில் தங்களுக்கான வெற்றி, அரசியல் ரீதியாக மிகவும் முக்கியம் என்பதால், தினகரன், ஓ.பி.எஸ் அணி மதுசூதனன், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை அந்த கட்சிகள் பின்பற்றி வருகின்றன. இதில் தினகரன் மற்றும் மதுசூதனை வீழ்த்த திமுக பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.
 
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர், ஆர்.கே.நகரில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர், அமைச்சராக இருந்தவர், அவைத்தலைவர், அதிமுகவில் பல வருடங்களாக இருப்பவர், 40 வருடங்களுக்கும் மேல் ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் மண்ணின் மைந்தர் என்ற   இமேஜுடன் இருப்பவர் மதுசூதனன். எனவே அவரை வீழ்த்த அவரின் பழைய விவகாரங்களை திமுக தற்போது கையெலெடுத்துள்ளது. 
 
அமைச்சராக இருந்த போது அவர் கொண்டு வந்த கொடுங்கையூர் குப்பை கிடங்கால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கொருக்குப்பேட்டை பகுதியில் குடிநீருடன் கசியும் கழிவு நீர், சிபிசில் நிறுவனத்தின் குழாய்களிலிருது கசியும் பெட்ரோலியப் பொருட்கள் குடிநீரில் கலந்து வருவது, முக்கியமாக, பல வருடங்களாக அந்த பகுதியில் இருந்து வரும் தண்ணீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை சரிசெய்ய மதுசூதனன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இதையெல்லாம் கையெலெடுத்துள்ள திமுக, தேர்தல் என்றவுடன் ஆர்.கே.நகர் தொகுதி மீது, திடீர் பாசம் காட்டுகிறார் மதுசூதனன். இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் அவர் அமைச்சராக இருந்த போதும், எம்.எல்.ஏவாக  இருந்த போதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரச்சாரத்தில் பேச திட்டமிட்டுள்ளது. மேலும், அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. 
 
எனவே, மொத்தமாக சேர்த்து ஒரு அறிக்கை போல் தயாரித்து மக்களிடம் நோட்டீஸ் அடித்து கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதையெல்லாம் ஓ.பி.எஸ் அணியினர் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடுத்த கட்டுரையில்