வழக்குத் தொடர்ந்த நபரை எனக்கு தெரியாது என்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
கத்தி படம் தனது மூத்த குடி என்ற கதையின் பாதிப்பில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், முருகதாஸிடம் இந்தக் கதையை இரண்டரை மணி நேரம் கூறினேன். கதையை கேட்டவர் இன்னும் மெருகேற்றிவிட்டு வரச் சொன்னார். கதையை மெருகேற்றும் நேரத்தில் அவர் என்னுடைய கதையை வைத்து கத்தியை எடுத்துள்ளார் என மீஞ்சூரைச் சேர்ந்த கோபி என்பவர் வழக்கு தொடர்ந்தது நினைவிருக்கலாம். அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
வழக்கு தொடர்ந்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது. அவரை சந்தித்ததில்லை. கதை பற்றி விவாதிக்கவும் இல்லை. அவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதை வைத்து நடவடிக்கை மேற்கொண்டால் பல கோடிகள் எங்களுக்கு நஷ்டமாகும் என தனது மனுவில் அவர் கூறியுள்ளார்.
முருகதாஸின் பதில் மனுவைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 16 -க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.