இரட்டை இலைக்கு மல்லுக்கட்டும் வழக்கறிஞர்கள்: மோகன் பராசரன்; ஹரீஷ்சால்வே!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (09:00 IST)
ஆர்.கே. நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என சசிகலா அணியின் தினகரனும், ஓபிஎஸ் அணியின் மதுசூதனனும் கூறி வருகின்றனர். இரண்டு அணியில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என்ற பஞ்சாயத்து இன்று முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.


 
 
சசிகலாவின் பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது என்ற தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் இரு தரப்பினரும் பல்வேறு விளக்கங்கள் அளித்த பின்னரும் தேர்தல் ஆணையம் இன்று இரு தரப்பினரையும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க உத்தரவிட்டுள்ளது.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு நாளை மறுதினம் சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளதால். இரட்டை இலை விவகாரத்தை தேர்தல் ஆணையம் இன்று முடிவுக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது.
 
அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த இரட்டை இலை விவகாரத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் பிரபல வழக்கறிஞர் ஷரீஷ்சால்வே ஆஜராகி தேர்தல் ஆணையத்தில் வாதாட உள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் சசிகலா அணி சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி வாதாடுகிறார். இதே மோகன் பராசரன்தான் முலாயம்சிங் யாதவ் சார்பாக சைக்கிள் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி வாதாடினார். ஆனால் அதில் அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்